தமிழ் திரையுலகில் எந்தவித பின்னணியும் இல்லாமல் நுழைந்து, தன் நடிப்பின் மூலமும், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதன் மூலமும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் விஜய் சேதுபதி.
தற்போது நடிகர் என்பதையும் தாண்டி சமூக அவலங்களுக்கு எதிராகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் பண்பாடு காக்கப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்.
சபரிமலைப் பிரச்னையில், 'பெண்கள் புனிதமானவர்கள், அதனால் இந்த பிரச்னையில் நான் முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன்' என்றார்.
மேலும் 'காதல் திருமணம் செய்வதன் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும்' என்று ஜாதியத்திற்கு எதிராக தன் கருத்தை பதிவுசெய்தார்.
இந்நிலையில் "பகவத் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைக்கு சீரழிவுக்கு இது போன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம்" என்று விஜய் சேதுபதி கூறியதாக அவதூரான செய்தி சமூக வலைதளங்களில் உலாவியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் சேதுபதி "என் அன்பிற்குரிய மக்களுக்கு, பகவத்கீதை மட்டுமல்ல; எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன். சில சமூக விரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்" என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
